காஸாவில் வான் வழியாக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட போது பாரசூட் வீழ்ந்து விபத்து - ஐவர் பலி, பலர் காயம்
காஸாவின் வடக்கு பகுதியில் வான்வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட போது ஏற்பட்ட பாரசூட் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காஸாவின் வடக்கில் ஷாதி என்ற பகுதியில் பாரசூட் மூலம் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இதன்போது, பாரசூட் ஒன்று பழுதாகி உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் வீழ்ந்துள்ளது.
இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உணவுப் பொதிகள் மக்களின் தலையில் வீழ்ந்து பலர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து கடலோரத்தில் உள்ள அல் - ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகில் நடந்ததாக மருத்துவமனையின் தலைமை செவிலியர் முகம்மது ஷேக் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் வடக்கு காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமான நிலையில் உள்ளனர்.
அங்குள்ளவர்களுக்கு அமெரிக்காவும் ஜோர்தானும் வான்வழியாக உதவிகளை வழங்கி வருகின்றன.
ஐந்து பேர் கொல்லப்பட்ட பாரசூட் விபத்து குறித்து காஸாவில் உள்ள ஹமாஸ்களின் அரச ஊடக அதிகாரி ஒருவர் கூறுகையில், "வான்வழியாக உதவிகள் வழங்குவது "பயனற்றவை" என்றும், "உதவிகள் வழங்குவதற்கு சிறந்த வழி இல்லை" என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, வான்வழியாக உதவிகள் வழங்குவதோ அல்லது கடல்வழியாக உதவிகள் வழங்குவதோ காஸாவிற்கு தரைவழியாக உதவிகள் வழங்குவதற்கான மாற்றாக இருக்க முடியாது என்றும் எல்லை வழியாக லொறிகள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
28 Views
Comments