தேஷபந்து தென்னகோனுடன் தொடர்புடைய வெலிகம துப்பாக்கிச்சூடு - 06 பேர் நீதிமன்றத்தில் சரண்

2023 ஆம் ஆண்டில் மாத்தறை வெலிகம பெலேன பதியிலுள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் ஏனைய 06 சந்தேகநபர்களும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தனர்.
நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பெப்ரவரி 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி டி சில்வாவும் இதில் உள்ளடங்கியிருந்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பின்னர் தேஷபந்து தென்னகோன் பத்திரமொன்றை தாக்கல் செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம்(19) சரணடைந்ததுடன் எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபர் ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
41 Views
Comments