கொழும்பில் கால்வாய்கள்,வடிகாண் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகாண் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் கால்வாய்கள் மற்றும் வடிகாண் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி துறைசார் பிரிவு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி, நிர்மாணம், வீடமைப்பு அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் கால்வாய்கள் மற்றும் வடிகாண் கட்டமைப்புகள் முறையாகப் பேணப்படாமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
குப்பை மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவது குறித்து நிலையான தீர்வுகளுடன் கூடிய திட்டத்தை தயாரித்து அவற்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
9 Views
Comments