மியன்மாரில் ஆயுதம் தாங்கிய குழுவிடமிருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை
மியன்மார் - தாய்லாந்து எல்லையில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் காலை 9.35 அளவில் அவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.
ஏனைய 48 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.
மியன்மார் - தாய்லாந்து எல்லையில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இலங்கை இளைஞர், யுவதிகள் 56 பேர் தடுத்து வைக்கப்பட்டு கணினி குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் நாம் அறிக்கையிட்டிருந்தோம்.
இதனிடையே, மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 15 பேரையும் இம்மாதத்திற்குள் நாட்டிற்கு அனுப்பிவைக்க முடியும் என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் பொது மன்னிப்பு தினத்தையொட்டி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் கடந்த டிசம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
10 Views
Comments